Tuesday, 16 June 2026

பெரிய காது சிறுவன் வாசகப் பார்வை

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் அதிகம் வாசித்து வரும் புத்தகங்களில், உலகளவில் நன்கு அறியப்பட்ட சிறந்த தமிழ் இலக்கியக் கதைசொல்லியும் எழுத்தாளருமான ஐயா கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய நூல்கள் ஆகும். அவரின் கைவண்ணத்தில் உருவான ஏழாவது சிறுவர் நாவலான பெரிய காது சிறுவன்.


    
பெரிய காது சிறுவன் நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது, நான் ஒரு கதை படிக்கவில்லை ஒரு புதுவிதமான உலகத்தில் காலடி வைத்தது போல உணர்ந்தேன். இந்தக் கதை முழுவதும் குமரன் என்ற சிறுவனின் பார்வையின் வழியாகவே நகர்கிறது. அவனுடைய வெளிநாட்டு கனவுகள், அவனது உள்ளத்திலுள்ள ஆர்வம், மற்றும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆச்சரியமாகப் பார்க்கும் விதமாக,இவை அனைத்தும் கதைக்கு உயிர் கொடுக்கின்றன.

 
குமரனுடன் பயணிக்கும் நண்பன் சிவா கதைக்கு சிறந்த துணையாக இருக்கிறான். அவனுடைய நகைச்சுவையும் இயல்பும் கதையை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றுகின்றன. சாதாரணமானதாகத் தொடங்கும் விமானப் பயணம், அவர்கள் சந்திக்கும் பெரிய காது சிறுவன் என்ற மர்மமான பாத்திரத்தின் மூலம் முற்றிலும் வெவ்வேறு திசைக்குச் சென்று விடுகிறது. அந்தச் சிறுவன் எந்த உலகத்தைச் சேர்ந்தவன். அவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்விகள்? வாசகர்களின் மனதில் நிறைய சிந்தனைகளை உண்டாக்குகின்றன.

மனிதர்களுக்குப் புலப்படாத ஒரு உலகம், மேகங்களுக்கு அப்பால் இருக்கும் மர்ம சக்திகள், ஒளியால் உருவான உருவங்கள் போன்ற கற்பனை அம்சங்கள் இந்த நாவலை ஒரு சாதாரண சாகசக் கதையிலிருந்து ஒரு உயர்ந்த கற்பனைப் பயணமாக மாற்றுகின்றன. இது குழந்தைகளுக்கான கற்பனை கதையாக இருந்தாலும், அதில் ஒரு ஆழமான கருத்து ஒளிந்திருக்கிறது என்று நான் உணர்ந்தேன்.

இந்த நாவலின் மொழி மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் கற்பனை நிறைந்ததாகவும் உள்ளது. விமானம், மேகங்கள், வானம், ஒளி, தெரியாத உலகம் போன்ற காட்சிகள் வாசிக்கும் போது கண்முன்னே தோன்றும் அளவுக்கு விவரிக்கப்பட்டுள்ளன. அதுதான் இந்நாவலின் மிகப் பெரிய வெற்றி என்று நான் நினைக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், இந்த நாவல் சிறுவர்கள் மட்டும் படிக்க வேண்டிய ஒன்றல்ல. பெரியவர்கள் படித்தாலும், அவர்கள் குழந்தை மனதை மீண்டும் ஒருமுறை அனுபவிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை இது தருகிறது. கற்பனை மட்டும் இல்லாமல், அதில் மறைந்துள்ள உணர்ச்சிகளும் நண்பத்துவமும் இதை இன்னும் ஆழமாக்குகின்றன.

மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெரிய காது சிறுவன் என்பது குழந்தைகளுக்கான ஒரு சாதாரண சாகசக் கதை அல்ல. அது கற்பனையையும், அறிவியலையும், உணர்ச்சியையும் இணைத்த ஒரு அர்த்தமுள்ள நாவல். சிறுவர் இலக்கியத்தில் இதற்கு ஒரு முக்கிய இடம் நிச்சயமாக உரியது என்று நான் நம்புகிறேன். என்னை அக்கதை உலகிற்கு அழைத்துச் சென்றதற்காக ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து இதுபோல் பல நூல்கள் எழுத என் வாழ்த்துக்கள் ஐயா.


 

தீவிர வாசகி,

ஷர்மிளி

Tuesday, 2 June 2026

வாசகப் பார்வை


 சிறார் நாவல், நாவல், சிறுகதை, குறுங்கதைகள் என வாசிப்பில் அதிகம் ஈடுபட்டு வருகிறேன். அதன் தொடர்ச்சியாக நடுகல் இணையதளத்தில் வெளியான ஐயா கே. பாலமுருகன் அவர்களின் “மாலியின் சீப்பு” என்ற சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மாலியின் சீப்பு வெறும் சிறுகதை அல்ல. வாசித்து முடித்த பின்னரும் நினைவுகளில் நீண்ட நேரம் ஒலித்துக்கொண்டே இருக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. முதலில் ஒரு தந்தையின் எளிய பயணமாகத் தொடங்கும் கதை, படிப்படியாக நினைவுகள், காதல், காத்திருப்பு, தனிமை மற்றும் மனித மனத்தின் ஆழங்களைத் தொட்டுச் செல்கிறது.

சுனிதா கேட்ட ஒரு தங்கச் சீப்பைத் தேடும் முயற்சி, சாதாரணப் பயணமாக இல்லாமல் ஒரு மர்மமான அனுபவமாக மாறுகிறது. சொங்க்லா நகரத்தின் கடற்கரை, சுவர் ஓவியங்கள், மழை, பழைய விடுதி, கடலின் உப்பு வாசனை என ஒவ்வொரு காட்சியும் என் கண்முன் உயிர்ப்புடன் விரிந்தன. குறிப்பாக, தங்கக் கன்னியின் கண்களைப் பற்றிய வர்ணனைகள் கதையின் முழுச் சூழலையும் ஒரு மாயமான உணர்வால் நிரப்பின.

மாலி, அருண்மொழி, மீனவன், தங்கக் கன்னி, சுனிதா ஆகியோரின் கதைகள் தனித்தனியாகத் தோன்றினாலும், இறுதியில் அவை அனைத்தும் நினைவுகளின் ஒரே வட்டத்தில் இணைந்து நிற்பதை உணர முடிகிறது. “நினைவு அதிக நாட்கள் உயிரோடு இருந்தால், அது மனித உருவத்தை விட்டுவிடும்” என்ற கருத்தே கதையின் மையக் கருத்தாக எனக்குத் தோன்றியது.

இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தது அதன் மொழிநடை. எந்த அவசரமும் இல்லாமல், அலைகள் கரையை மெதுவாகத் தொட்டுச் செல்லும் தன்மையோடு கதை நகர்கிறது. வாசிக்கும் போது நானும் அந்தக் கடற்கரையில் நின்று தங்கக் கன்னியைத் தேடிக்கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன்.

கதையின் முடிவு பல கேள்விகளை விட்டுச் சென்றாலும், அதுவே அதன் அழகாக இருந்தது. எல்லா கதைகளுக்கும் பதில்கள் தேவைப்படாது; சில கதைகள் உணரப்படுவதற்காகவே எழுதப்படுகின்றன என்பதை இந்தப் படைப்பு மீண்டும் நினைவூட்டியது.

வாசித்து முடித்த பிறகும் கடலின் சத்தம் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஒரு நல்ல கதை என்ன செய்யுமோ, அதையே இந்தக் கதையும் செய்தது.

இந்தக் கதையின் மூலம் பல காட்சிகளை என் மனதில் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. வாசிப்பின் இன்பத்தையும், நினைவுகளின் ஆழத்தையும் உணர்த்திய இந்தச் சிறந்த சிறுகதையை எழுதிய ஐயா கே. பாலமுருகன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க உங்கள் எழுத்துப் பயணம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன் ஐயா.


பெரிய காது சிறுவன் வாசகப் பார்வை

  கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் அதிகம் வாசித்து வரும் புத்தகங்களில், உலகளவில் நன்கு அறியப்பட்ட சிறந்த தமிழ் இலக்கியக் கதைசொல்லியும் எழுத்தாளரும...